October 21, 2006

குற்றவாளிக் கூண்டில் ஆதி ஷங்கரர்-1

ஆதி ஷங்கரர் ஒரு வினாடிப் பொழுதில் ஒரு ஒளி பிம்பத்தின் இறுதியில் வந்தடைகிறார், அது ஆதியும் அந்தமும் இல்லாது ஒரு இடம் முன்னேற எண்ணி முதல் அடி எடுத்து வைத்தவுடன் ஷங்கரர் முன்னே இருந்து கண்ணாடி துண்டுகளாக சிதறி காட்சி விரிகிறது.

"நில்" கேட்கிறது குரல்...அங்கேயே நிற்கிறார் ஆதி ஷங்கரர். நிற்பது தரையே இல்லாத ஒரு இடத்தில்...ஒரு புறம் ஒரு பெரிய்ய வெண் திரை, எதிரே 7 ஒளிப்பந்துகள் 7 நிறத்தில்.. அதன் பின்னே ஒரு 50 ஒளிப் பந்துகள் அதே போல் பல்வேறு நிரங்களில்...

இன்னொரு பக்கம் ஒரு சுவர், அதில் மூடிய கதவு.

அந்த ஏழு ஒளிப் பந்துகளில் ஒன்று சற்றே மேலெழும்பி, " நீ இறந்துவிட்டாய்" என்று சொல்கிறது...

கேட்ட ஆதி ஷங்கரர் "ஓ! அது தானா இப்படி.." என்று எண்ணுகிறார்.

ஓளிப்பிம்பம்: "இந்தப் பிறப்பில் நீ மிகவும் சிறப்பாகச் செயல் பட்டுள்ளாய், இது தான் கடைசிப் படி"

"இது என்ன?" என்று ஆதி ஷங்கரர் அந்த வெண் திரையை நோக்கி கையசைத்துக் கேட்கிறார்..

"இது இந்த உலகில் நடப்பனவற்றைக் காட்டும் திரை. அதில் தெரியும் வண்ணங்கள் உன் செய்கையினால் தூண்டப்பட்ட முக்கிய சம்பவங்களின் நிகழ்வுகள்..." ஓளிப்பிம்பம் பதில் சொல்கிறது.

மறுபடியும், ஆதி ஷங்கரர் அந்த மூடிய கதவை நோக்கி "இது என்ன?" என்று கேட்கிறார்...

"பொறுமையாக இரு" எல்லாம் விளங்கும் என்றது... "எப்பவும் இதே போல் கேள்விகேட்டுக் கொண்டு சந்தேகம் தீர்த்துக் கொள்வதே இவன் வாடிக்கை, மூன்று வயதில் சமஸ்கிருத இலக்கணத்தில் சந்தேகம் வந்து தன் தந்தையின் பதிலில் திருப்தி அடையாமல் பக்கத்து ஊருக்கு காட்டுவழியில் நடந்து சென்று வேறு யாரையோ கேட்டுத் தெரிந்துகொண்டவன் தானே..." என்று கிசு கிசுக்கின்றன ளிரண்டு ஒளிப் பிம்பங்கள்.

"அந்தக் கதவு பரப் பிரம்மத்தை அடையும் வழி..." என்று மூன்றாவது ஒரு ஒளிப் பிம்பம் சொல்கிறது. "உனது பூலோக நன்மை தீமைகளைச் சரிபார்த்து உனது செயல்களினால் நீ பரப் பிரம்மத்தை அடைவதா அல்லது பூலோகத்தில் இன்னொறு பிறவி எடுப்பதா என்பது பற்றி இங்கே முடிவெடுக்கப் படும்" என்று சொல்கிறது நான்காவது ஒளி வட்டம்.

"அந்த முடிவை நீங்கள் தான் எடுப்பீர்களா?" கேட்டார் ஷங்கரர்.

"இல்லை, நாங்கள் வெறும் வழக்கறிங்கர்கள் போலத்தான், உனது பூலோகச் செயலுக்கு விளக்கங்களை உன்னுடன் விவாதிப்பதன் மூலமும் உனது செயல்களுக்கு உனது விளக்கத்தை கேட்பதன் மூலமும் பெறுவோம், முடிவு தானாக நிகழும்." என்று அந்த நான்காவது ஒளிப்பிம்பம் சொல்கிறது.

"முடிவு எதுவாக இருந்தாலும், நீ பல நல்ல காரியங்கள் செய்திருக்கிறாய், ஆகயால் குறைந்த பட்சம் நீ பூலோகத்திற்குத் திரும்பச் சென்றாலும் நல்ல வசதி வாய்புள்ள வாழ்க்கைதான் உனக்கு கிடைக்கும், வீடு, கார், பங்களா..." என்று ஐந்தாவது ஒளிப்பிம்பம் அள்ளி விடும் நேரத்தில் ஷங்கரரின் கண்கள் "அங்கே இன்னும் ஒரு முறையா?" என்ற கேள்வி எழுப்பியது...

அதே வேளையில் அந்த வெண் திரையில் ஒரு கரும் புள்ளி தோன்றி மரைந்தது...

"அது என்ன?" வின்வினார் ஷங்கரர்.

"அது உன் சீடன் பத்மபதாச்சார்யாரின் மரணம்" என்று சொல்லிய ஒளிப்பிம்பம் ஒரு வினாடி மௌனித்துவிட்டு "அவன் திரும்ப பூலோகத்திற்குச் செல்கிறான்" என்று சொன்னது.

"என்ன நடக்கிறது இங்கே, அவன் எப்படி இறந்தான், எவ்வளவுகாலம் வாழ்ந்தான், அவன் மறு பிறவி எடுப்பதை எப்படி ஒரு வினாடியில் முடிவெடுக்கிறீர்கள்?" என்று கேட்டார் ஷங்கரர்.

ஓளிப் பிம்பம்:"அவன் நீ இறந்து மேலும் 30 ஆண்டுகள் வாழ்ந்தான்...இதே போல் கீழ் நிலை " நீதி மன்றம்" இருக்கிறது, மற்ற "கீழ் நிலை" மனிதர்களுக்காக, அங்கே அவன் விதி நிர்ணயிக்கப்பட்டது, அந்த " நீதி மன்றம்" பூலோகக் கால அளவில் இயங்கி 13 நாட்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியது..., அத்தகய நீதி மன்றத்தில் வெற்றி பெற்று வருபவன் தான் இங்கே விசாரிக்கப் படுவான், இங்கே காலம் மிக மெதுவாகச் செல்லும், யுகங்கள் பல கடந்துவிடும் ஆனால் நமக்கு அது ஒரு வினாடி போல் இருக்கும், ஆனால் இது தான் கடைசி நிலை ..இதற்குப் பிறகு பரப்பிரம்மம் தான்."
ஷங்கரர்: "இங்கே அவன், அவள் என்றெல்லாம் இல்லை, இந்த தோற்றம் உண்மையல்ல, இந்த உடை உண்மையல்ல, அந்த கதவும் உண்மையல்ல இல்லையா?"
ஒளிப்பிம்பம்: "இந்தத் தருணத்தில் இதற்கு விடை கிடையாது, பொறுமையாக இரு, இது உன் விசாரணைக்காக ஏற்படுத்தப் பட்ட மாயை என்பதைத் தவிற"

"பிரச்சனையைப் பேசுவோம்" நடுவில் இருந்த ஒரு ஒளிப் பிம்பம் சொன்னது. " நீ முதல் இரண்டு கீழ் நீதி மன்றங்களில் வெகு சுலபமாக வெற்றி பெற்றுவிட்டாய், ஆனால்"..
"ஆனால்" ஏழாவதாக அமர்ந்திருந்த ஒளிப் பிம்பம் சிவப்பாக மாறி தொடர்ந்தது.." நீ மிக அடிப்படைத் தவறு ஒன்றைச் செய்துவிட்டாய் என்பது என் எண்ணம், சனாதன தர்மத்தின் மிக அடிப்படை கோட்பாட்டை நீ தகர்த்துவிட்டாய், முந்தய ரிஷிகளின் பல காலத் தவப்பலனால் ஏற்படுத்தப் பட்ட கட்டமைப்பை நீ தகர்த்துவிட்டாய் என்பது என் கருத்து".

" நான் சரியாக என் பணியைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்பார்த்தேன்" என்றார் ஆதி ஷங்கரர், "ஆனால், இது, ...என்ன தவறு செய்தேன் நான்?"

" நீ சனாதன தர்மத்தை, தத்துவ அடிப்படை தர்மத்திலிருந்து, சரித்திர அடிப்படை தர்மத்திற்கு மாற்றி விட்டாய்"

ஒரு நீண்ட அமைதி நிலவியது...

" நான் விளக்குகிறேன்" அந்த ஏழாவது ஒளிப் பிம்பம் ரத்தச் சிவப்பாக மாறி இருந்தது, "பல காலம் முன்னே இருந்த ரிஷிக்கள் சனாதன தர்மத்தை நிலை நிருத்திய போது, அவர்கள் மனித குலம் இருக்கும் வரை தர்மமும் இருக்கும் படி அதன் விதிகளை அமைத்தனர். தொடர்ச்சியே மிக முக்கியம். அதனால், தத்துவத்தை அதன் அடிப்படையில் நிருவினர். அப்பொழுது தான், காலம் மாற மக்களும் தத்துவங்களைக் காலத்திற்கேற்ப பிரயோகிப்பர். ஆகயால் தத்துவங்கள் தொடர்ந்து நிற்கும். அந்த ரிஷிகளின் பெயர்கள் உனக்குத் தெரியுமா? இல்லை, ஏனென்றால் பெயர்கள் தெரிந்தால் அவரைக் கடவுளாக்கிவிடுவர் என்பதால், அவர்கள் பெயர்களை மறைத்துவிட்டனர். எப்போது அதைத் துவக்கினார்கள் என்று தெரியுமா? இல்லை, அது தெரிந்தால், வருடா வருடம் அந்த நாளைக் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள் என்பதால் அதுவும் மறைக்கப் பட்டது. இதெல்லாம் அந்த ரிஷிகள் முன்னமே அறிந்ததினால் தான் அதை ஒரு ஆதியும் அந்தமும் இல்லாத சரித்திரம் என்ற சங்கிலியால் கட்டுப் படுத்த முடியாத நிலையில் தர்மத்தை விதைத்தனர். அந்தச் சங்கிலியை உன் செயல் அந்தத் தர்மத்தின் மேல் கட்டியது"

ஷங்கரர்: "போதும் நிறுத்துங்கள்... நான்.."

ஒளி: "பொறு, நீ பேசி உன் நிலையை விளக்க உனக்கு வாய்ப்பு வரும், முதலில் நாங்கள் சொல்வதை முழுமைகக் கேள்"

மற்றொரு ஒளிப் பிம்பம் தொடர்ந்தது.."முதலிலிருந்தே, மனிதனின் நடத்தைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அவன் எவ்வளவு பக்தியாக வழிபடுகிறான் என்பதில் முக்கியத்துவம் இல்லை. "கர்மத்தின்" அடிப்படையில் சமூகம் இயங்கியது. வழிபாட்டின் அடிப்படையில் அல்ல. வழிபாடும் இறை நம்பிக்கையும் தனிப்பட்ட விஷயம், கோவில்கள், உருவங்கள், சிலைகளெல்லாம் கீழ் நிலை வழிபாட்டு முறைகளாகவே பார்க்கப் பட்டன. மக்கள் இஷ்ட தேவதைகளைப் பொருட்படுத்தாமல் எங்கு வேண்டுமானாலும் இறைவனை வணங்கலாம், வழிபாட்டின் மொழி அக்னியாக இருந்தது. உருவங்களும் சிலை வழிபாடும் பழங்குடி வழிபாட்டு முறைகளின் எச்சங்களே. அதனாலேயே, இனச் சண்டைகள் பல இந்த உருவங்கள் அடிப்படையில் நிகழ்ந்தது. எந்த இடத்திற்கோ, ஒரு யோகிக்கோ, ஒரு குறிப்பிட்ட நாளிற்கோ முக்கியத்துவம் கொடுக்கப் படவில்லை. புனித யாத்திரை என்றால் என்னவென்றே தெரியாது. ராமர், கிருஷ்ணர் போன்ற பிறவிகளின் நற்குணங்களை தங்கள் வாழ்வில் கடைபிடிக்க மக்கள் எண்ணினர். அவர்கள் உண்மையில் இருந்தார்களா, அப்படியென்றால் எங்கே பிறந்து, வளர்ந்தனர் போன்ற சின்னச் சின்ன விஷயங்களில் மக்கள் அக்கரை எடுத்துக் கொள்ளவில்லை. என்றாவது கவுடில்யர் புனிதயாத்திரை சென்றதாகக் கேள்விப் பட்டிருக்கிறாயா? இல்லை திருவள்ளுவர் தான் "சிவ ராத்திரி" கொண்டாடியதாகச் சொல்லக் கேட்டிருக்கிறாயா?"

"அடிப்படையில்"...தொடர்ந்தது ஆறாவதாக அமர்ந்திருந்த ஒளிப்பந்து, "சரித்திரம் என்பது மக்களின் அன்றாட வாழ்வில் சிறிதும் முக்கியமில்லாத சமாச்சாரமாக இருந்தது, மக்கள் முன்னோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர், பின்னோக்கி அல்ல. ஆனால், நீ எல்லாவற்றையும் மாற்றிவிட்டாய்.. உன் செயலினால் தொடர்ந்து கொண்டிருக்கும் பின் விளைவுகளை உனக்கு காட்டியாகவேண்டும். அதோ அந்த கரும்புள்ளியைத் திரையில் பார்"

"அது என் செயலின் பின்விளைவாகத் தான் இருக்கவேண்டும்.."

"சரியாகச் சொன்னாய், அது ராமானுஜாச்சார்யார்...அவர் இன்னொறு சரித்திர அடிப்படை வாழ்வுமுறையை உபதேசித்துக் கொண்டிருக்கிறார்"

"லௌகீக உலகம் மாறிக் கொண்டே இருக்கும்" என்று நான்காவது ஒளிப் பந்து பேச ஆரம்பித்தது.." நதிகள் தோன்றி மறையும், மலைகள் எழுந்து கரையும். காடுகள் அழிந்து பாலை நிலங்களாகும், பாலை நிலம் செழிப்படைந்து காடுகளாகும். ஆகயால், முக்கிய இடம், குறிப்பிட்ட காலம், ஒரு தனி மனிதன் என்பதெல்லாம் இயற்கைக்கு ஒவ்வாத விஷயங்கள். இயற்கையின் கோட்பாடுகளை தகற்காத சிந்தனைகள் மட்டுமே நிரந்தரமானவை. சனாதன தர்மத்தினை விதைத்த ரிஷிக்கள் இதை இறந்த உடலை புதைக்காமல் தீயிட்டு நிறுபித்தனர். உலகில் உள்ள பல கலாச்சாரங்கள் இறந்தவர் உடலைப் புதைப்பதும் அதில் தங்கம் வெள்ளி என்று லௌகீக உலகின் செல்வங்களைச் சேர்த்து புதைப்பது என்பதைக் கொண்டுள்ளனர். சமாதியே ஒரு சிறப்புமிக்க இடமாகக் கொண்டாடப் படுகிறது. புனித யாத்திரை செல்லும் இடமாகவும் மாறிவிடுகிறது. இப்படிப்பட்ட வாழிபாட்டு முறை ஒரு வாழ்வியல் முறையா...? இல்லை, இது சாவு-இயல்-முறை!. மனித உடலைப் புதைத்து வழிபடும் முறையே, சரித்திர அடிப்படை கொண்டது. இதே, அந்திமக் கிரியையாக உடலை தீயிலிடுவதன் மூலம் அந்த மனிதனின் லௌகீக வாழ்க்கை அழிக்கப் படுகின்றது. அவன் உடுத்திய உடைகள் தூரக் கடாசப் படுகின்றன. எகிப்திய அரசர்களின் தனிப்பட்ட விஷய்ங்களை பிரமீடுகள் கட்டிப் பாதுகாத்தது போல், ராமரின் உடைகளையோ, கிருஷ்ணரின் செறுப்பையோ இந்திய மக்கள் பாதுகாத்து கண்காட்சிப் பொருளாக, வணங்கும் பொருளாக மாற்றவில்லை. ராமர் எந்த இடத்தில் உயிர் துரந்தார்? கிருஷ்ணர் உடல் எங்கே தகனம் செய்யப் பட்டது? தெரியாது, தேவையில்லை.! அவர்களின் நல்ல கருத்துக்களை மக்கள் பின்பற்றுவதே முக்கியமாகக் கருதினர்...ஆனால் நீ! வந்து இதையெல்லாம் கெடுத்து விட்டாய்!"

"பின்னோக்கிச் செல்!" அந்த வெண் திரையை நோக்கி நான்காவது ஒளிப் பந்து கட்டளையிட்டது.
வெண் திரையில் காட்சி விரிந்தது....அடர்ந்த காட்டின் நடுவில் ஒரு நதி, நதிக்கரையில் ஷங்கரர் நடந்து சென்று கொண்டிருக்கிறார்... அங்கே ஓரிடத்தில் ஒரு ராஜ நாகம் படமெடுத்துக் கொண்டிருந்தது...ஆனால் என்ன அதிசயம், அதன் தலைக்குக் கீழே ஒரு தவளையை கொடூர வெயிலிலிருந்து அது பாதுகாத்துக் கொண்டிருந்தது...! இதைப் பார்த்த ஷங்கரர், இங்கே தெய்வீகம் நிறைந்துள்ளது என்று கூறி சாரதா மாதா கோவில் கட்ட நினைக்கிறார்.
"நில்" வெண்திரையில் காட்சி அப்படியே "Freeze" ஆகி நிற்கிறதி..."இது தான் உனது முதல் அடி, சரித்திர அடிப்படை வாழ்க்கை முறைக்கு, ஒரு நாள், அந்த ஒரு நொடியில் ஒரு நாகம் தானே உண்ணக்கூடிய தவளையை வெய்யிலிலிருந்து பாதுகாத்தது என்றால் அந்த இடம் ஒன்றும் என்றுமே இறைவனின் அருள் பெற்ற இடமல்ல" அந்த ஒளிப் பந்து சொன்னது. "மேலே செல்"

வெண் திரையில் வேறொரு காட்சி... "ஒரு நதியின் அடிப்பகுதியில் ஆதி ஷங்கரர் நீந்தி வந்து அங்கே கிடந்த ஒரு சிவ லிங்கத்தை எடுத்து கரைக்கு கொண்டு வருகின்றார். அதை ஷங்கரர் அங்கே கூடியிருந்த மக்களிடம் காட்டி "இந்த சிவ லிங்கம் புத்த மதத்தவர்களால் பல நூற்றாண்டுகள் முன்னர் நதியில் வீசப் பட்டது. இப்போது நமக்கு அது கிடைத்துள்ளது இந்த மூர்த்தியை இங்கே இந்த புனிதஸ்தலத்தில் வைத்து பூஜிக்கவேண்டும் இங்கே தான் சிவன் நெடுந்தவம் புரிந்துள்ளார்" என்கிறார்.

" நில்" மறுபடியும் வெண் திரைக்காட்சி Freeze ஆகிறது..."என்ன செய்தாய் பார்த்தாயா...? யாருக்குமே தெரியாத ஒரு புது விஷயம் அங்கே சிவன் நெடுந்தவம் புரிந்தது என்பது, அதை வைத்துக் கொண்டு அந்த இடத்தில் ஒரு புனிதஸ்தலம் கட்டிவிட்டாய். மறுபடியும் ஒரு சரித்திர அடிப்படையில் புனிதஸ்தலம். இது வெரும் ஆரம்பமே...இதே போல் கிருஷ்ணர், ராமர் என்று உன் கொள்கையினால் இதையெல்லாம் வழிப்பாட்டுத் தெய்வங்களாக்கிவிட்டாய். அதற்குக் கோவில்கள் திரும்பும் திக்கெல்லாம். பாட்டெழுதுகிரேன் பேர்வழி என்று அயோத்தி, மிதிலா, துவாரகா என்று சரித்திர அடிப்படையில் புனிதஸ்தலங்களைக் கோடிட்டு காட்டிவிட்டாய். இஷ்டதேவதையிடம் சரணாகதி ஆவது மோக்ஷத்திற்கான வழி என்று புதிய கோட்பாட்டை ஆரம்பித்துவிட்டாய், மனிதனைத் தவிர கடவுள் என்று தனிப்பட்டு திகழும் சக்திவுள்ளது, அதை வழிபடவேண்டும், போற்றவேண்டும், அதன் முன் வணங்கவேண்டும் என்பதே இயற்கைக்கு முரனான பழங்குடித் தத்துவம்"

"ஆனால் நான் அத்வைதம் என்ற தத்துவத்தையும் சொல்லியுள்ளேன்" மிக அமைதியாக ஷங்கரர் சொன்னார்.

ஒரு சிறிய அமைதி நிலவியது...

"ஆம், அதனால் தான் இந்த நிலைவரை உன்னால் வர முடிந்தது, உன் நல்ல செயல்கள் நீ ஆரம்பித்து வைத்த இந்த கெட்ட செயல்களை எவ்வாறு ஈடு செய்கிறது என்பதைப் பார்க்கத்தான் இவ்வளவு விவாதம், உனக்கு உன் கருத்தைச் சொல்ல வாய்ப்பு கிடைக்கும் இன்னும் இருக்கிறது கேள்"
வெண்திரையில் காட்சி வேகமாக நகர்ந்தது....ராமானுஜர் தோன்றி மறைந்து சில நூற்றாண்டுகள் நகர்ந்தது...புத்த மதம் அழிந்து கொண்டிருந்தது...பக்தி மார்க்கம் மென் மேலும் வளர்ந்து கொண்டிருந்தது... "மெதுவாகச் செல்" என்றது ஏழாவது ஒளிப்பந்து.

"இவர்கள் யார்? சப்த ரிஷிகளா?" என்று வியந்து கொண்டிருந்தார் ஷங்கரர்.

திரையில் காட்சி தோன்றியது...ஒரு கோவில், அதில் பக்தர்கள் ஆண்கள் பெண்கள் என்று பஜனை பாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று சில படைவீரர்கள் உள்ளே நுளைந்து அவர்கள் கடவுள் பெயரைக் கத்திக் கொண்டே ஆண்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தனர்...கர்பக் க்ருஹத்தில் ஒளிந்து கொண்டிருந்த பெண்களை அங்கேயே உடைகளைக் களைந்து வண்புணர்ச்சி செய்தனர்... ஒருவர்கூட எதிர்த்துப் போராடவில்லை...."ராமா" கிருஷ்ணா" என்று கத்திக் கொண்டு இருந்தனர்...அதே படை வீரர்கள் அந்த கடவுள் சிலைகளை உடைத்து நொறுக்கினர். தங்கம் வெள்ளி நகைகளை எடுத்துச் சென்றனர்...

"இது வெறும் ஆரம்பமே! பார் எப்படி அவர்கள் எதிர்த்துப் போராடவேண்டிய கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்று. சரித்திர மஹா புருஷர்களை துணைக்கு அழைத்து என்ன நடக்கப் போகிறது. எல்லாம் நீ அரம்பித்து வைத்த செயலினால் தான். இது வேத தத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரு சமூகத்திற்கு நடந்திருக்கவே நடந்திருக்காது. பார்க்கலாம் எவ்வளவு காலம் இப்படிப் போகுமென்று. சரித்திர அடிப்படை கொண்ட மக்கள் சமூகம் தங்கள் சரித்திரம் தான் உயர்ந்தது, என்று அடுத்தவர்களிடம் நிறூபிப்பதே பெரும் செயலாகக் கருதிக் கொண்டு இருப்பர்...அதுவே சரித்திர அடிப்படை சமூகத்தின் இயற்கை."

திரையில் காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன...காலம் ஓடிக்கொண்டிருந்தது...திடீரென்று ஏழாவது ஒளிப்பிம்பம் எதையோ பார்த்துவிட்டு "மெதுவாகச் செல்" என கட்டளையிட்டது.

1670 AD என்ற காலத்தில் திரையில் காட்டியது..தக்கான பீடபூமியின் நடுவில் ஒரு கிராமத்தில் ஒரு யோகி தன் கடைசி சொற்பொழிவை ஆற்றிவிட்டு. பிரணவ மனிதிரத்தை ஜபிக்கிறார். அவர் கைகளில் அசையும் ஜப மாலை நின்றவுடன் சுற்றி சுவர்கள் கட்டப் பட்டு ஒரு கோவில் எழுப்பப் படுகின்றது. பக்தர்கள் வெள்ளமாகப் பெருகி அங்கே வர ஆரம்பிக்கின்றனர்.


"என்ன நடந்தது பார்த்தாயா? சரித்திர புருஷர்களுக்கு, அவர்கள் பிறந்த இடம் போன்றவற்றிற்கு பக்தி என்பது அவர் இறந்தது அந்த இடத்தில் புனித ஸ்தலம் அமைத்து பிறப்பிடத்தை வழிபடுவது போல் இறப்பிடத்தை வழிபடுகின்றனர். என்ன தான் அத்வைதம் என்பதை நீ விளக்கியிருந்தாலும் மனிதன்-கடவுள் என்ற துவைத கொள்கையை நீ அன்றாட வாழ்வில் ஊக்குவித்ததனால் அரை குரை துவைதமாம ராமானுஜர் கொள்கையும், பின்னர் வந்த மத்வ மதக் கொள்கையின் முழுமுதல் துவைதமும் சமூகத்தில் வந்தடைந்து விட்டது. இதற்குப் பிறகு பக்தி மட்டுமே, எல்லா தத்துவ அடிப்படை எண்ணங்களும் நின்று விடுகின்றது. இஷ்ட தேவதையிடம் சரணாகதி, கோவில், பூஜை. ஒரு நாளுக்கு எவ்வளவு முறை, என்று, எப்படி பூஜிப்பது போன்ற அபத்தங்கள் மட்டுமே உள்ளன. வேதங்கள் கிடைக்கப் பெற்ற நாள் முதல் பல தத்துவங்கள் தோன்றி மறைந்துள்ளன. முதலில் சாங்கியரினுடய தத்துவம், அடுத்து, மைமாம்ஸ, மைத்ராயணி, மத்யமாதின, கௌதும்ன, அன்வ, சௌனக, பைப்பால்த, ஜைமின்ய, என்று பல..சில தத்துவங்கள் காலத்தால் அழிந்தன, சில நிலைத்து நின்றன. தொடர்ச்சியாக மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவமே தேடலின் முதல் படி. அது என்றுமே இருந்தது. ஒரு சில தத்துவங்கள் அழிந்த போதும் அடுத்துவந்தவை மக்கள் சாஸ்திர சம்பிரதாயத்தை மட்டுமே கருத்தில் கொண்டால் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தை இழந்துவிடுவர். அது நடந்தே விட்டது, உன்னால்"

"என்னால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை தயவு செய்து நிறுத்தவும், என் நிலை விளக்கம் இன்னும் நான் கொடுக்கவில்லை" என்றார் ஆதி ஷங்கரர்.

ஒளி: "சரி, அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்."

"அடுத்த பின் விளைவுகளைப் பார்ப்போம்..." திரையில் காட்சிகள் தோன்றின. வெள்ளையர்கள் வந்து சென்றனர். மோஹன் தாஸ் காந்தி கொல்லப் பட்டிருந்தார். அவரது அந்திம கிரியை நடந்த இடத்தை அலங்கரித்து ஒரு பெரும் நினைவுச் சின்னம் எழுப்பப் படுகிறது. அவர் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்கின்றனர்.

"அவரது கொள்கைக்கு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்" என்றது ஒரு ஒளிப் பந்து.
திரையில் இந்திய நகரங்களில் அனைத்துவித மக்களும் தாங்கள் காந்தியக் கொள்கையைக் கடைபிடிப்பவர்கள் என்று சொல்லிக் கொண்டு அதே போல் உடை அணிந்து செல்வாக்கை பெருக்கிக் கொண்டிருந்தனர். திருடர்கள், ஜால்ராக்கள், மொள்ள மாரிகள் காந்தி பெயரைச் சொல்லிக் கொண்டு வோட்டு வாங்கிக் கொண்டிருந்தனர். நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிக் கொண்டிருந்தனர். காந்தியின் சிந்தனைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. அது கடைபிடிக்கமுடியாது என்பது விவாதப் பொருளல்ல என்றாலும், அடி மனதில் காந்தி பெயரைச் சொல்லி எதைச் செய்தாலும் தப்பித்துவிடலாம் என்ற எண்ணம் தான்."

"ஒரு சாதாரண மனிதனை சரித்திர புருஷராக்கி வணங்க ஆரம்பித்தால் அவர் கடைபிடித்த சிந்தனைகள் செயலிழந்து போய். அந்த ஆளின் பெயர் மட்டுமே நிற்கும். இதுவே இயற்கையின் நியதி" சொன்னது அந்த ஏழாவது ஒளிப்பந்து.

திரையில் ஒரு வீட்டின் உட்புறத்தில் ஒரு வயோதிக ஆள் தன் மூன்று மகன்களுடன் ராமர், கிருஷ்னர், சிவா, சீதா இத்யாதி..இத்யாதி சிலைகள் கொண்ட பூஜை அறையில் பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும் பிரசாதத்தை வீட்டிலுள்ள் அனைவரும் பிரித்துக் கொடுக்கிறார் அந்த வயோதிகர். அழைப்பு மணி ஒலிக்கிறது. கதவைத் திறந்தால் அங்கே, ஒரு வக்கீல்.
வரவேற்பு, குடிக்க டீ, காபி எல்லாம் முடிந்தது. வீட்டின் ஹாலில் எல்லோரும் குடும்ப சமேதமாக, பெரியவர் தன் மனைவியுடன், அவரது மகன்கள் தங்கள் மனைவி குடும்பத்துடம் அமர்ந்திருக்கின்றனர்.

வக்கீல்: "நீங்கள் கேட்டது போல் papers ready செய்துவிட்டேன்."

வயதான பெரியவர்: " நன்றி வக்கீல் சார், ரொம்பவே வேகமாகச் செய்துவிட்டீர்கள். என் உடல் நிலை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆகயால் என் சொத்துக்களை என் குடும்பத்தாருக்குப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்துவிட்டேன். இதுவே எனது உயில்.. வீடு பெரிய பையனுக்கு, நில புலன்கள் இரண்டாவது பையனுக்கு, Factory கடைசி மகனுக்கு."
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வீட்டில் ஒரே கூச்சல் குழப்பம்...."Factory எனக்குத்தான் வேண்டும்..." "என் அப்பா ஒன்றும் இந்த வீட்டிற்காக உங்களை எனக்கு கட்டி வைக்கவில்லை... மரியாதையாக நில புலன்களை எடுத்துக் கொள்ள கேளுங்கள்..." மனைவிகளின் குரல்கள் மகன்களின் திருப்தியின்மை.... நடுவில் பவமாய் அந்தப் பெரியவர்.

" நில்" ஒளிப் பந்து சொல்ல திரையில் காட்சி Freeze...! "பார்! பூஜையில் என்றுமே தனக்கு நேரும் கஷ்டத்தை எண்ணி வருந்தாத தன் கணவரிடம் நச்சரிக்காத பெண்ணை பூஜித்தனர். முற்றும் துரந்த மஹா புருஷரைப் பூஜித்தனர். இருந்தும், அவர்கள் வாழ்ந்து காட்டிய தத்துவத்தை மறந்துவிட்டு கூடப் பிறந்தவர்களுடனேயே தெரு நாய்கள் போல் சண்டை போட்டுக் கொள்கின்றனர். பார், சரித்திர அடிப்படை சமூகம் மனிதனி மனத்தை எப்படி மாற்றுகிறது என்று...பார், கடவுள்-மனிதன் என்று பாகுபாடு பிரித்தால் அது செய்யும் லீலையை...!"

காட்சி ஒரு நீர் மூள்கிக் கப்பலுக்குள் "பார், துவாரகா வைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்..." அடுத்த காட்சியில் ஒரு விண்வெளிக் கோளில் படங்கள் பதிவாகிக் கொண்டிருந்தது..."பார், ராமர் கட்டிய பாலத்தை படம் பிடித்துக் கொண்டும், மறைந்த சரஸ்வதி நதியை படம் பிடித்துக் கொண்டும் இருக்கின்றனர்.. இதெல்லாம் எதற்காக, எதற்காக பல்லாயிரமாண்டு முன் நடந்த சம்பவங்களுக்கு சான்றுகள் தேடுகின்றனர் ? நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த சனாதன தர்மம் ஒரு கோவில் கட்டுவதை வைத்துக் கொண்டு இப்படி அடித்துக் கொண்டு சீரழிகிறது...எல்லாம் எதனால்...?"

"இது போதுமா? இன்னும் வேண்டுமா?"


ஆதி ஷங்கரர், நிமிர்ந்தார்...." நீங்கள் முடித்துவிட்டீர்களா?" ..." நான் விளக்கலாமா?"

(தொடரும்...)

பின் குறிப்பு: இது ஒரு மொழி பெயர்ப்பு முயற்சி. இரண்டு பாகமாக பிரித்து எழுதுகிறேன். ஆங்கில மூலத்தின் சுட்டி இரண்டாவது/இறுதி பாகத்தில்.

26 comments:

கோவி.கண்ணன் [GK] said...

சில உ.கு விவாகாரங்களை உள்ளே நுழைத்திருந்தாலும் பதிவு ஆழமான காட்சிகளை காட்டி இருக்கிறது !

Amar said...

இரண்டாம் பாகம் எப்போது வரும் ?

நீளம் என்றாலும் படிக்க சுவையாக தான் இருந்தது.

Amar said...

இரண்டாம் பாகம் எப்போது வரும் ?

நீளம் என்றாலும் படிக்க சுவையாக தான் இருந்தது.

krishjapan said...

மிக நன்றாக வந்துள்ளது. பாராட்டுக்கள். அடுத்தது எப்போது என நினைக்க வைத்துவிட்டீர்கள். சற்றே நீளமென்றாலும், சுருக்கியிருந்தாலோ, மூன்று பாகமாய் பிரித்திருந்தாலோ, சரியாய் வ்ந்திருக்காது என்றே தோன்றுகிறது. ஆதிசங்கரர் இதற்கு எவ்விதம் பதில் சொல்லியிருப்பார் என சிந்திப்பத்ற்கு, இந்த இடத்தில் தான் தொடரும் போட வேண்டும்.

ஜயராமன் said...

ஒ! அற்புதமாக இருக்கிறது.

சற்று மிகைப்படுத்தி இங்கே சங்கரர் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். பட்டிமன்றம் போல அடுத்த பகுதியில் எண்ணம் மாறலாம்.

மூலம் எதிலிருந்து என்று சொல்லவில்லையே?

நன்றி

arunagiri said...

அருமையான user-friendly மொழியாக்கம் வஜ்ரா, பாராட்டுக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வஜ்ரா

மிக ஆழமாகவும் அற்புதமாகவும் வந்துள்ளது. எவ்வளவு நாளாக இச்சிந்தனைகளை மனதில் ஓட்டித் தேடிக் கொண்டு இருந்தீர்களோ! அது அத்தனையும் அற்புதமாக, கூர்முனைகளாக மொழியாக்கம் செய்துள்ளீர்கள்.

நடுவில் திரை, கதவு, ஒளி சிந்தும் விளக்குகள் என்று சினிமாட்டிக் effect-உம் நன்றாகத் தான் இருந்தது. நிச்சயம் இந்தப் பதிவு பல மோதல்களுக்கு ஆளாகி, நல்ல ஒளிச்சிதறல்களுக்கு வழி வகுக்கும், பாருங்கள். வாழ்த்துக்கள்!

சங்கரர் பதிலையும் கேட்டு விட்டு, விரிவாக மீண்டும் வருகிறேன்!
சங்கரரே! இதுவரை பதறாமல் மிக அருமையாக உள்வாங்கிக் கொண்டீர்கள்! இறைவன் விளையாட்டுக்குள் ஒரு விஷயத்தை வைக்க நினைக்கிறான். கலக்குங்கள்! All the best!!

கால்கரி சிவா said...

ஷங்கர், நல்லாயிருக்கு மொழிபெயர்ச்சி.

வஜ்ரா said...

சதயம்...
Cannot help...அங்கேதான் வெட்ட முடிந்தது... மற்ற படி நன்றி.

GK,

__/\__

samudra மற்றும் ஜெயராமன் சார்,

மீண்டும் அடுத்தவாரம் இதே வலைப்பதிவில் சந்திக்கும் வரை உங்களிடமிறுந்து விடை பெறுவது...VAJRA, VAJRa, VAJra, VAjra, Vajra, vajra.. :D

krishna,

சரியாகச் சொன்னீர்கள்...புரிந்து கொண்டமைக்கு நன்றி.

அருணகிரி மற்றும் கால்கரி,

நன்றி.

கண்ணபிரான்,

நன்றி,

இது மொழி பெயர்ப்பு முயற்சி என்றாலும் இதே போல் பல எண்ணங்கள் மனதில் ஓடிக் கொண்டும் இடித்துக் கொண்டு இருந்தது...

நாமக்கல் சிபி said...

சங்கர்,
அருமையா இருக்கு...
இதுக்கு எல்லாம் சங்கரர் பதில் வந்தா இன்னும் சுவாரசியம் கூடும்!!!

Unknown said...

I read it with great interest shankar.Cannot guess how its going to end.Eagerly awaiting the next part.

bala said...

வஜ்ரா அய்யா,

பிரமாதம்..
''esp dramatic effects''

சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை..

நம்ம ராகவன்,எஸ் கே,குமரன்,என்னார்,ஞானவெட்டியான்,
KRS, போன்ற அறிஞர்களும் இந்த பதிவில் கலந்து கொண்டு மெருகூட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன்,

பாலா

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா,

முதல் 3 பத்திகள் வாசித்தவுடன், இது நீங்கள் எழுதியதில்லை என்பது புரிந்து விட்டாலும், இது ஒரு அருமையான, திறமையான மொழிபெயர்ப்பு !

மிக சுவாரசியமாக எடுத்து சென்றுள்ளீர்கள், விவாதக் கருத்துக்களை !

//திடீரென்று சில படைவீரர்கள் உள்ளே நுளைந்து அவர்கள் கடவுள் பெயரைக் கத்திக் கொண்டே ஆண்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தனர்...கர்பக் க்ருஹத்தில் ஒளிந்து கொண்டிருந்த பெண்களை அங்கேயே உடைகளைக் களைந்து வண்புணர்ச்சி செய்தனர்... ஒருவர்கூட எதிர்த்துப் போராடவில்லை...."ராமா" கிருஷ்ணா" என்று கத்திக் கொண்டு இருந்தனர்...அதே படை வீரர்கள் அந்த கடவுள் சிலைகளை உடைத்து நொறுக்கினர். தங்கம் வெள்ளி நகைகளை எடுத்துச் சென்றனர்...
//
இது உங்கள் கருத்தா, ஒரிஜினலில் உள்ளதா ? ஒரு ஆர்வத்தில் கேட்டேன், தவறாக எண்ண வேண்டாம் !

முடிவை எதிர்நோக்கி

என்றென்றும் அன்புடன்
பாலா

வஜ்ரா said...

என்றென்றும் அன்புடன் பாலா,

அது ஒரிஜினலிலும் அப்படியே உள்ளது...

எனது கருத்தும் அதே.

Kasi Arumugam said...

நல்ல விவாதம். அடுத்த பாகத்தைக் காண ஆவல்.

ஜடாயு said...

வஜ்ரா, அற்புதமான மொழிபெயர்ப்பு. இதன் மூல வடிவை நான் படித்தேன். அதன் சுவையை இன்னும் அதிகமாக்கும் விதத்தில் அருமையாக மொழியாக்கம் செய்திருக்கிறீர்கள்.

இரண்டு பாகமாக போட்டது இன்னும் சிறப்பு. அடுத்த பாகத்தைப் படிக்கும் ஆர்வத்தை வாசகனிடம் தொக்கி நிற்கவிட்டு முடித்திருக்கிறீர்கள்.

அருமையான முயற்சி. பாராட்டுக்கள்!

ramachandranusha(உஷா) said...

வஜ்ரா,
கற்பனை நன்றாக இருக்கிறது.
குற்றசாட்டுகள் சரியாய் இருக்கின்றன. பார்க்கலாம் என்ன பதில் வருகிறது என்று:-)

ramachandranusha(உஷா) said...

ஒரு சாதாரண மனிதனை சரித்திர புருஷராக்கினால் அவர் கடைபிடித்த சிந்தனைகள் செயலிழந்து போய். அந்த ஆளின் பெயர் மட்டுமே நிற்கும். இதுவே இயற்கையின் நியதி" சொன்னது அந்த ஏழாவது ஒளிப்பந்து.//
வஜ்ரா,
திரும்ப படிக்கும்பொழுதில் இந்த வரிகள் குழப்புகின்றன. சாதாரணமோ அல்லது அசாதாரண மனிதனோ சரித்திர
புருஷன் என்றுக்கொண்டாப்படுபவர்கள் சொன்னதை யார் பின் பற்றுகிறார்கள். புத்தர், ஏசு, நபி, காந்திவரை இதுதானே
நடந்துக் கொண்டு இருக்கிறது. சான்று தேவையில்லை என்று நினைக்கிறேன்.

வஜ்ரா said...

ராமச்சந்திரன் உஷா அவர்களே,

அதைச் சற்றே மாற்றி எழுதிவிட்டேன்...


இது ஒரு மொழி பெயர்ப்பு முயற்சி.. மற்றும் இதுவே எனது முதலும் சீரியசுமான மொழி பெயர்ப்பு..தவறுகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்...சுட்டிக்காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

சரவணகுமார் said...

"""ஒரு சாதாரண மனிதனை சரித்திர புருஷராக்கி வணங்க ஆரம்பித்தால் அவர் கடைபிடித்த சிந்தனைகள் செயலிழந்து போய். அந்த ஆளின் பெயர் மட்டுமே நிற்கும். இதுவே இயற்கையின் நியதி" சொன்னது அந்த ஏழாவது ஒளிப்பந்து."""

முற்றிலும் உண்மை ....சந்தனம் பூசினாலும் கோபம் வருகிறது....செருப்பு மாலை போட்டாலும் கோபம் வருகிறது :)
சங்கரர் பதிலை எதிர் பார்க்க வைத்து விட்டது உங்கள் மொழி பெயர்ப்பு நடை..பாராட்டுக்கள் ...

வஜ்ரா said...

கலாநிதி மற்றும் சரவணகுமார்,

நன்றி.

வஜ்ரா said...

காசி,

பெரிய மனுசங்க வந்துருக்கீங்க...அனேகமாக இது தான் உங்கள் முதல் முறை என்று நினைக்கிறேன்.

நன்றி.

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமை வஜ்ரா.......அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்..

குமரன் (Kumaran) said...

இங்கே சொல்லப்பட்ட பெரும்பாலான கருத்துகளில் ஒப்புதல் இல்லாவிட்டாலும் மொழிபெயர்ப்பு மிக நன்றாகச் செய்யப்பட்டிருக்கிறது வஜ்ரா சங்கர். பாராட்டுகள். மொழிபெயர்ப்பு என்றே தோன்றா வகையில் இயற்கையாக இருக்கிறது கட்டுரை. அடுத்தப் பதிவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் ஐயா நீங்கள் சில உ.கு. விவகாரங்களை உள்ளே நுழைத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறார். அவை நீங்கள் நுழைத்தவை இல்லை; மூலத்திலும் அப்படியே இருக்கின்றன என்று எண்ணுகிறேன். சரியா?

வஜ்ரா said...

குமரன்,

அது ஒரிஜினல்ல அப்புடியே இருக்கு...

வேற எதுவுமே கண்ணுக்குத் தெரியாதா...அது ஏன் அவிங்களச் சொன்னா மட்டும் அத்தினி பேரும் அத்தையே நோண்டிகிட்டு இருக்கீங்க ?

பதிவு இந்து மதம் பற்றியது இஸ்லாம் பற்றியது அல்ல.

குமரன் (Kumaran) said...

//வேற எதுவுமே கண்ணுக்குத் தெரியாதா...அது ஏன் அவிங்களச் சொன்னா மட்டும் அத்தினி பேரும் அத்தையே நோண்டிகிட்டு இருக்கீங்க ?
//

நான் அதை நோண்டலை சங்கர். நான் நோண்டுவதற்கு இதில் மற்ற கருத்துகள் நிறைய மிக நிறைய இருக்கின்றன. ஆனால் இந்த கட்டுரையின் அடுத்தப் பகுதியையும் படிக்கக் காத்திருக்கிறேன். நான் நினைப்பதை ஏற்கனவே ஆதிசங்கரர் சொல்லியிருந்தால்? அதனால் தான். :-)

கோவி. கண்ணன் ஐயாவும் இஸ்லாமியரைக் குறிக்கும் ஒன்றை மட்டுமே உ.கு. என்று குறிக்கவில்லை என்று எண்ணுகிறேன்.